தமிழக அரசு பள்ளிகளில் ஆளும் அதிமுக அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையில் செய்த முக்கிய மாற்றங்களில் அனைவராலும் வரவேற்கப்பட்டு ஒரு விஷயம் என்றால் அது, 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு மதிப்பெண்களை, முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் என்று விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டது தான்.
அதுமட்டுமில்லாமல், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றம், பாடத்திட்டம் மாற்றம், இலவச பேருந்து பயணம், மடிக்கணினி, ஸ்மார்ட் கிளாஸ் என்று பல அதிரடி மாற்றங்களை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கவும் தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 – 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.