கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை

மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு நடக்கிறது.

வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின், ‘இ-மெயில்’ முகவரிக்கு, வினாத்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில், வினாத்தாள் பள்ளிக்கு வந்ததால், அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க, போதிய நிதியில்லை என, ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
வினாத்தாள் அச்சடிப்பு குறித்து, தகவல் இல்லாததால், கல்வித்துறை அதிகாரிகளும் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், கடந்த, 21 ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

10 கேள்விகள்
இதில், ‘சி.சி.இ., எனும் தினசரி கற்றல் திறனாய்வு தேர்வு வினாத்தாளை, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம். வினாக்களை கரும்பலகையில் எழுதி போட்டு, மாணவர்களின் நோட்டில் விடை எழுதுமாறு அறிவுறுத்தி, மதிப்பிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது.
இந்த வினாத்தாளில், பாடவாரி யாக, 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரே வரியில் சிந்தித்து விடையளிக்கும் படியாக, கேள்விகள் இருப்பதால், பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு, மாணவர்களுக்கு பிரத்யேக வினாத் தாள் வழங்காமல், கரும்பலகை யில் எழுதி போட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துவதில் நிறைய சிக்கல் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் புரிதலுக்காக, வண்ணங்கள் அறிதலுக்கான கேள்விகள் உள்ளன.
இதை, கரும்பலகையில் எழுதி அறிவது சிரமம். மேலும், பொருத்துதல், இணையற்ற படங்களை கண்டறிய, ஓவியம் வரைய வேண்டியுள்ளது. இதை மாணவர்களும், நோட்டில் வரைந்து விடையளிக்க வேண்டும்.
ஓய்வு நேரம் இல்லை
தேர்வு நடத்த, 10 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. தினசரி விடைகளை திருத்தி, மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, செயல்வழி கற்றல் அட்டைகளை நிரப்புவதால், அதிக எழுத்துப்பணியால் திண்டாடுகிறோம்.
இதில், திறனாய்வு தேர்வை நடத்தி, மதிப்பாய்வு செய்தால், ஓய்வு நேரம் கிடைக்க வழியில்லை. இதற்கு பதிலாக, வினாத்தாளிலே விடையளிக்கும் படியாக தேர்வுத்தாள் வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்

கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

● அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, 2014 ஜூலையில், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைகளைசுத்தப்படுத்த, தனியாக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்

● மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலில், கல்வி நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, திடக்கழிவுமேலாண்மை நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்

● அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சிகள் ஏற்க வேண்டும். இந்த பணிக்கு உள்ளாட்சிகள் தான் ஆட்களை நியமிக்க வேண்டும்.பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என, உள்ளாட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

● பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, காலையில் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், ஊழியர்கள் சென்று கழிப்பறைகளை சுத்தப்படுத்தவும், பள்ளி முடியும் நேரம் வரை அவர்கள் பணியில் இருக்கவும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்

● வகுப்பறை பராமரிப்பு, பள்ளி வளாகம் பராமரிப்பு பணிகளுக்கும் இந்த ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்

● அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்தையே, இந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்

● அரசு ஒப்பந்த விதிகளின் படி இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், மகளிர் சுய உதவிக்குழு, சமுதாய அமைப்புகளையும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம்

● பள்ளி தலைமை ஆசிரியர்கள், பராமரிப்பு பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு திருப்தியில்லாத பராமரிப்பு பணி ஒப்பந்ததாரரை, உடனடியாக நீக்க வேண்டும்

● பெண்கள் பள்ளியில் கட்டாயம் இரண்டு பெண் துப்புரவுபணியாளர்களும், ஆண்கள் பள்ளியில் இரண்டு ஆண் அல்லது பெண் துப்புரவு பணியாளர்களும், இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஒரு பெண், ஒரு ஆண் துப்புரவு பணியாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும்

● பெண்கள் பள்ளியில், ‘நாப்கின்’களை பாதுகாப்பாக அகற்றுவது இந்த பராமரிப்பு பணி நிறுவனத்தின் வேலையாகும்

● அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் விபரங்களை, ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை. மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

 

 

இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள் அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது.

 

இதில், பல மாநிலங்களின், 209 படைப்புகள் இடம் பெற உள்ளன. தென் மாநிலங்களில், கர்நாடகாவில் ஒன்பது; கேரளாவில் ஒன்று; ஆந்திராவின் நான்கு அரசு பள்ளிகள், தேசிய போட்டியில் பங்கேற்கின்றன.

 

புதுச்சேரி சார்பில், மாகியில் உள்ள, ஜவஹர்லால் நேரு அரசு பள்ளி பங்கேற்கிறது. தமிழகத்தில், இரு தனியார் பள்ளிகள் மட்டுமே தேர்வாகியுள்ளன; அரசு பள்ளி எதுவும் தேர்வாகவில்லை. இது, அரசு பள்ளி மாணவர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.