‘குரூப்- 4’ தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா?

அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, ‘குரூப் – 4’ தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வு, 2018 பிப்., 11ல் நடக்க உள்ளது. இதற்கான, ‘ஆன்-லைன்’ பதிவு, நவ., 14ல் துவங்கியது; டிச., 13ல் முடிகிறது. இதுவரை, கிராம நிர்வாக அதிகாரியான, வி.ஏ.ஓ., பதவிக்கு, தனியாக தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை, குரூப் – 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; தேர்வுக்கான பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு அளவில், சமூக அறிவியல், ஆங்கிலம், வரலாறு, பொது அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, வினாக்கள் இடம் பெறும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், குரூப் – 4 தேர்வு எழுத விரும்பும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 10ம் வகுப்பு பாட புத்தகங்கள் தேவை.

அவர்கள் பள்ளிக்கல்வித் துறையின் பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகம் வாங்க சென்றால், அங்கு புத்தகம் இருப்பு இல்லை என, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

ஆனால், தமிழக பாடநுால் கழகத்தில், சொற்ப எண்ணிக்கையில் புத்தகம் இருப்பு உள்ளதாகவும், அதையும் மாணவர்களுக்கே வழங்க உள்ளதாகவும், பாடநுால் கழகத்தினர் தெரிவித்துஉள்ளனர்.

தமிழக பாடத்திட்ட புத்தகங்கள், தனியார் கடைகளில் விற்பனை செய்யப் படாததால், குரூப் – 4 தேர்வர்களால், தனியாரிடமும், புத்தகம் வாங்க வழியில்லை. அதனால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், புத்தகம் வாங்குவது எப்படி என்ற தவிப்பில் உள்ளனர். சிலர், பழைய புத்தக கடையில் சென்று, 10ம் வகுப்பு புத்தகங்களை தேடி வருகின்றனர். எனவே, குரூப் – 4 தேர்வுக்கு, போதிய பாடப் புத்தகம் வழங்கும்படி, பாடநுால் கழகத்தை, டி.என்.பி.எஸ்.சி.,யும், அரசும் அறிவுறுத்தும்படி, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை

சென்னை: ‘நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது’ என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

 

தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், ‘பல்கலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இது குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக் கூடாது. பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இது குறித்து, டிச., 3க்குள், செயல்படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில உயர் கல்வித் துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும், யு.ஜி.சி., விதிகளின்படி, எந்த தனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக் குறிக்குள், ‘பல்கலைக்கு இணையாக கருதப்படும்’ என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.

அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற் கான ஆதாரத்துடன், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

 

ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, பல படிநிலைகளில் வெற்றி பெறும் தேர்வாளர்களுக்கு, அதன் பின், பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகின்றனர்.

 

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் செய்யவும், தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்யவும், பஸ்வான் கமிட்டி, ஆக., 2016ல், யு.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை ஆராய்ந்த, யு.பி.எஸ்.சி., மார்ச்சில், தன் தரப்பு பரிந்துரை அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைத்தது.

 

இந்நிலையில், பஸ்வான் கமிட்டி, யு.பி.எஸ்.சி., அறிக்கைகளின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகள் மற்றும் தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி., – எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் தலைமை ஆசிரியர்கள் திணறல்

எம்.பி.,- – எம்.எல்.., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன


இவற்றில், புதிய வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், ‘நபார்டுஉள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. எம்.பி., – எம்.எல்..,க்களும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியில், பள்ளிகளுக்கு, வகுப்பறைகள் கட்டித் தருகின்றனர்.

ஆனால், ஏற்கனவே, இந்த நிதியில் கட்டப்பட்ட பல வகுப்பறைகளின் தரம், கேள்விக்குறியாக இருப்பதால், தலைமை ஆசிரியர்கள், இதை விரும்புவதில்லை.

25 ஆண்டுகள் : அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டடங்களின் ஆயுள், 25 ஆண்டுகள் என, வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எம்.பி., – எம்.எல்.., நிதியில் கட்டப்படும் கட்டடங்களில், பெரும்பாலானவை, ஓரிரு ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.காரை பெயர்வது, தரமற்ற தளம், விரிசல் உள்ளிட்டவை ஏற்படுவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது

முழுக்க முழுக்க, ஒப்பந்ததாரரின் கட்டுப்பாட்டில் மட்டுமே கட்டப்படுவதால், இக்கட்டடங்களின் தரத்தை, பொதுப்பணி, பள்ளிக்கல்வித் துறைகள் என, எதுவும் கண்காணிப்பதும் இல்லை

ஒப்பந்ததாரரும், ‘பலருக்கு கமிஷன் வழங்க வேண்டி இருப்பதால், இதற்கு மேல் தரமாக கட்ட முடியாதுஎன, வெளிப்படையாகவே கூறுகிறார்.

நாங்களே பொறுப்பு : கட்டடத்துக்கோ, குழந்தைகளுக்கோ சேதம் என்றால், அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டி உள்ளது. இதனால், பல பள்ளிகளில், எம்.பி., – எம்.எல்.., நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை, குடோன்களாகவும், வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.பல்வேறு திட்டங்களில், பொதுப்பணித் துறை மூலம், வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எம்.பி., – எம்.எல்.., மூலம் வரும் கட்டடங்களை, நாங்கள் விரும்புவதில்லை

இருப்பினும், பலர் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது, என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது.எனவே, பள்ளிகளில் எந்த நிதியில் வகுப்பறை கட்டினாலும், அதன் தரத்தை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவசஹெல்ப்லைன்தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் கே..செங்கோட்டையன் தெரிவித்தார்.
குழந்தைகள் தினவிழா அரசு சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:-மாணவமாணவிகள் 16 மணிநேரம் பெற்றோர்களிடமும், 8 மணிநேரம் ஆசிரியர்களிடமும் இருக்கிறார்கள். நாட்டின்எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து அவர்களுக்கு தக்க அறிவை ஊட்டிவருகிறார்கள். மத்திய அரசு எத்தகைய போட்டித்தேர்வை கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவமாணவிகள் 73 ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாத இது போன்ற பயிற்சி எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும் இல்லாதது.

மேலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் உயர் கல்வியில் என்ன படிக்கலாம், என்ன படிப்பை படித்தால் வேலைகிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு வசதியாக விரைவில் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும். அது முழுக்க முழுக்க இலவசம்.புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணைத்து கொடுக்கப்பட உள்ளது. அந்த பாடத்திட்ட வரைவு வருகிற 20-ந்தேதி இணையதளத்தில் வெளியிட உள்ளோம்.தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர்.

அவர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரி செய்ய டிசம்பர் மாதத்திற்குள் பயிற்சி மையங்களை தொடங்க உள்ளோம்.32 மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குஇலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.ஸ்மார்ட் கார்டில் சிம் கார்டை பொருத்த நினைத்தோம். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி சிம் கார்டு இல்லாமல் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் கே.. செங்கோட்டையன் பேசினார்.விழாவில் அவர் குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

மேலும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், நூலகங்களுக்கு அதிக நன்கொடை வழங்கியவர்களுக்கும், நூலகங்களுக்கு அதிக உறுப்பினர் சேர்த்தவர்களுக்கும் விருது வழங்கினார்.விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, ஜெயவர்த்தன் எம்.பி., விருகை ரவி எம்.எல்.., நட்ராஜ் எம்.எல்.. உள்பட பலர் பேசினார்கள்.இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், கார்மேகம், கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார்

EMIS STUDENT ADMIT OPTION FROM OTHER SCHOOLS ENABLED NOW EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும்

போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது
.மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம்  இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும்.  அடையாள அட்டை பதிவுகள் பதியலாம் எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit)  வசதி செய்யப்பட்டுள்ளது

பள்ளி மாணவியருக்கு ‘சட்ட சேவை பெட்டி’

மாணவியருக்கு சட்ட உதவி செய்வதற்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் மகளிர் பள்ளியில், ‘சட்ட சேவை பெட்டிதிட்டம் துவக்கப்பட்டு உள்ளது.


ராமநாதபுரம், புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், ‘சட்ட சேவை பெட்டிதிறப்பு விழா நடந்தது. மாவட்ட நீதிபதி, கயல்விழி திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில், ”தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் பள்ளியில், சட்ட சேவை பெட்டி துவக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

மேலும், சட்ட உதவிகளால் மக்கள் அடையும் நன்மைகள், பொதுமக்களுக்கான சட்டப் பணிகளில், மாணவியர் எப்படி உதவ முடியும் என்பது குறித்தும், நீதிபதி, கயல்விழி விளக்கினார்

அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.

இதில் மிகவும் வருத்தமான செய்தி கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் சுமார் 80,647 பள்ளிகள் இதர பள்ளிகளோடு இணைக்கப்பட்டு (அ) மூடப்பட்டும் உள்ளன.

ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என இருந்து வந்த நிலையில் தற்போது 1:24 ஆக மாறியுள்ளது. இதற்கான காரணம் மாணவர்களின் எண்ணிக்கையின் குறைவுதான். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிக பட்சமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும். இவர் அலுவலக பணியின் காரணமாக வெளியில் சென்றால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே மொத்த மாணவர்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?? அரசுக்கு இதனால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்றே தரவுகள் கூறுகின்றன.

மேலும், இதைத் தவிர்த்து பல காரணங்களை முன் வைக்கலாம். தரமான கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் குறைந்து காணப்படுகிறது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காண்போம்,

பெற்றோர் ஆசிரியர் உறவு:

அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பெற்றோர்-ஆசிரியர் உறவு:

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எத்தனை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய முன் வருகிறார்கள்..?? மாணவர்களின் நிலையை கட்டாயம் எடுத்துக் கூறுவது ஆசிரியர் கடைமை. தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் நிலையை அறிய முற்படுகின்றனர். காரணம் பணம். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவது காரணமானாலும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். மாணவனின் நிறைகுறைகளை அறியச் செய்தல், பெற்றோரின் மனதில் ஆசிரியர், நிர்வாகம், பள்ளி பற்றிய நல்ல சிந்தனை மேலோங்கும்.

வரமுடியாத சூழ்நிலை என்றால் அவர்களுக்கு தகுந்த நேரத்தை ஆசிரியர் உருவாக்கித் தரவேண்டும். ஏனெனில், நல்ல மாணவனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு. இதன் மூலமே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும், ஆசிரியர்-மாணவர் உறவும் நன்றாக வலுப்பெற்று அமைய வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்-பெற்றோர், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அடுத்ததாக முன்வைக்கும் கருத்து தலைமை. “தலைமை” சரியில்லாத போது பள்ளியின் தரத்தை முன்னேற்றுவது கடினம். தலைமையாசிரியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தி முடிப்பார். ஆனால், ஆசிரியர், அவரது செயல்பாடுகளை நன்கு கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.

ஆசிரியரின் பணிகளையும், மாணவர்களை ஆசிரியர் கற்றல்-கற்பித்தல் அடைவுகளை சோதிக்கும் முறையை கட்டாயமாக தலைமையாசிரியர் கவனிக்க வேண்டும்.

சில பள்ளியில்  அல்லது தனியார் பள்ளியில் தலைமையில் இருக்கும் நபரின் கற்பிக்கும் ஆசிரியரின் பண்புகளையும், கற்பிக்கும் முறைகளையும் ஆராய்ந்து அது சரியில்லாத பட்சத்தில் பணியை விட்டு நீக்கப்படுகின்றார். எனவே தான் மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் நிலையை அறிந்து கற்பித்தலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். விளைவு மாணவர்களின் கற்றல் வீதம் உயர்ந்து, மாணவகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆனால், அரசு பள்ளியில் ஆசிரியரின் பணிகளை ஆராய்ந்து பார்க்கலாம் தவிர பணியை விட்டு நீக்கம் செய்யவோ முடியாத காரியம்.ஆசிரியர்கள் அனைவரும் முன்வந்து  அக்கறையுடன் செயல்படவேண்டும்.

குறிப்பு:”30மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ஓர் ஆசிரியர் குடும்பமே வாழ்வு பெறும்”.மறவாதீர்

ஆக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறைக்கவுமான     மந்திரம், தந்திரம் எல்லாம் ஆசிரியரிடமே உண்டு.
தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரிக்க காரணம் Uniform, Tie-யும் கூட; அரசு பள்ளியில் சமமான சீருடை வழங்கினாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் அப்போதைய சூழ்நிலையில் உள்ள நிலையைப் பொருத்தே வகுப்பறை அமையும். எனவே, இடைப்பட்ட நேரத்தில் தலைமையாசிரியர்-ஆசிரியர் கலந்தாய்வு முக்கியம்.

தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தித் தரும் Smart Class, அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும். இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியை கற்பிக்க தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஒரு தரமான கணினி ஆய்வகம் அமைத்து தனியார் பள்ளிக்கு இணையாக 1-ஆம் வகுப்பு முதலே கணினியை கற்பிக்க வேண்டும். அந்தந்த துறையில் தேர்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க வேண்டும். பெற்றவள் மட்டுமே தன் பிள்ளையை அக்கறையுடன் கவனிப்பாள். அதேபோன்று அந்த துறை வல்லுநர்களால் மட்டுமே எளிமையுடனும், அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் கற்பிக்க முடியும்.

தனியார் பள்ளிகளில் ஓவியம், கராத்தே, யோகா, இசை, விளையாட்டு போன்ற “கூடுதல் திறன்கள் கொண்ட கல்வியும் (Extra Curricular Activites)”பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாகவும் பெற்றோர்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்து வருகின்றது. அரசு பள்ளிகளில் இவற்றை தரமான முறையில் வழங்கிட வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும்.

அதாவது, (1-5), (6-8), (9-10) (11-12)என்ற நிலைகளில் நியமிக்க வேண்டும். கணினி, ஓவியம், இசை, யோகா ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என எண்ணும் பெற்றோர்களே, அதிகம் பொருளாதாரம் இல்லாத பின்தங்கிய நிலையிலும் Matric, CBSE –பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். காரணமான மற்றொன்று “ஆங்கிலம்” பேசுதல் கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி மாணவர்களை பேசவைக்கின்றனர். Result, English Speech இதையே அடைவாகக் கொண்டு செயல்படுகின்றன ‘தனியார் பள்ளிகள்’.

எனவே, அரசு பள்ளியிலும் மாணவர்களை ஆங்கிலம் பேச வைக்க வேண்டும். தனியார் பள்ளிக்கு சமமான பாடங்கள், சமச்சீர் கல்வி இருந்தபோதிலும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்கவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கின்றன.

மாணவர்களுக்கு Phonetics-யை கற்பிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களின் நிலைக்கினங்க கற்பிக்க வேண்டும். தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் மனநிலையை பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது.

ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெளிப் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் பங்குபெறச் செய்தல் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் வசதி இல்லாத சூழலில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) அதற்கான நிதியை ஏற்படுத்தித் தர ஆசிரியரே உக்கப்படுத்த வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அன்றைய தினம் வித்தியாசமான ஆடை, உணவு, குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு வந்து கற்பிக்கின்றனர். அரசு பள்ளியிலும் அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஆப்பிள் நிறம் “சிவப்பு” என்று சிவப்பு நிறம் பற்றிய தகவலை கூறுவர். அரசு பள்ளி முடியாத பட்சத்தில் தனக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கற்பிக்கலாம்.

சிவப்பு நிறத்தை கற்பிக்க கோவை பழத்தையோ, செம்பருத்தி பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிக்கலாம். இதைத்தான் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதை தவிர அன்பு சார் பெற்றோர்களே ஆங்கிலம் கல்வி அல்ல மொழி என்பதை உணர வேண்டும்..

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு யோசிக்க மற்றொரு காரணம் “Gang Formation”. ஒரு வகுப்பறையில் 40 மாணவர்களில் 39 பேர் படித்து ஒருவர் படிக்காத நிலையில் அந்த மாணவரே அவர்களை பார்த்து திருந்தும் வாய்ப்பு அதிகம். அதற்கான முயற்சியும் ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவரவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இதற்கென சிறு தலைப்புகள் கொடுத்து பேசச் சொல்லுதல், வரைதல், ஓவியம், கவிதை என அனைத்து மாணவர்களையும் பங்குபெறச் செய்வதன் மூலம் Gang Formation-யை தடுக்கலாம். மாணவர்களுக்கு எது, எந்த செயல் பெருமையை உண்டாக்கி அவனை உயர்ந்தவனாக காண்பிக்கும் என்பதை உணர்த்திட வேண்டும்.

ஆசிரியர், பெற்றோர்களுக்காக படிக்காமல் மாணவர்கள் தனக்காக படிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டமாக இல்லாமல் ஒவ்வொரு மாணவனின் கற்றலையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தனித்தனியாக சந்தித்து பேச வேண்டும்.

பல பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லாமல் மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர். இவையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமே. தூய்மையான கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து, துப்புறவு பணியாளர்களை அவசியம் பணியமர்த்திட வேண்டும். தரமான கல்வியை வழங்கும்போது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

ஆக, சமச்சீர் கல்வியை தரமானதாக வழங்கிட வேண்டும். Matric, CBSE-க்கு இணையான பாடத்திட்டம், ஆகியவற்றை ஏற்படுத்தி கற்பித்தாலே அரசு பள்ளிகளிலும் அட்மிசனுக்கு வரிசை நிற்கும். மாணவர்களின் அறிவாற்றல் +2 முடித்து பின்னர், NEET, IAS போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமானால் அரசு பள்ளியே போதுமானது.

கற்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் கற்கலாம்; கற்பிக்கும் ஆசிரியரும் சூழலும் அமைந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒப்பிட்டு படிக்கும் ஆற்றல் அதிகம். அதை ஆசிரியரே மெருகேற்ற வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியரின் ஒத்துழைப்பும், பங்குமே அதிகமாக இருக்க வேண்டும். அரசும் முழு பங்காற்றிட வேண்டும் என்பதே எனது கருத்து.

தனியார் பள்ளியில் படிப்பதையே செல்வாக்கு மிகுதியாக நினைக்கும் எண்ணமும், அங்கு படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் மேம்பட்டு இருக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.

அரசு பணியில் உள்ள அரசு பணியாளர்களின் பிள்ளைகள் தனியாரில் கற்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளை  அரசு பள்ளியில் சேர்க்க அவர்களே முன்வர வேண்டும்.கட்டாயப்படுத்த வேண்டாம் அப்போதுதான் கல்விமுறை அரசு பள்ளியில் மாற்றம் அடையும்; மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்.

அரசு  பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். சட்ட திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டும் போதாது; முறையாக கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளில் சாரணர் இயக்கம் கட்டாயம் : அரசு உத்தரவு

பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் சாரண, சாரணியர் இயக்கம் கட்டாயம் தொடங்கப்பட வேண்டும்.
இந்த இயக்கத்தில் குறைந்தது 12 பேர் கொண்ட முழுமையான சாரணர் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக பள்ளியில் ஆர்வம் மிக்க ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.மாவட்ட அளவிலான பயிற்சிகள் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும். மாணவர்களுக்கு சிறப்பான வகையில் பயிற்சிகளை வழங்கி ராஜபுரஸ்கார் விருது பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இனி, ‘ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்!’; கணினிமுன் அமர்ந்து கல்லூரியை தேர்வு செய்யலாம்

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், ‘ஆன் லைனில்’ நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டிய அலைச்சல் இல்லை.
உத்தரவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., – எம்.இ., – எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கை, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை நடத்துகிறது.இந்நிலையில், 2016ல் நடந்த கவுன்சிலிங்கில், மாணவர் சேர்க்கை செயலராக இருந்த,பேராசிரியை இந்துமதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்முறையை அறிமுகம் செய்தார். இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது.அதை தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், ஆன்லைனிலேயே கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்காக, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அறிமுகம் ஏற்கனவே, 2015 வரை, இவர், இப்பொறுப்பில் இருந்துள்ளார்.அவரது மேற்பார்வையில், வரும் கல்வி ஆண்டில், ‘ஆன்லைன் கவுன்சிலிங்’ நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, அண்ணா பல்கலையின் மண்டல அலுவலகங் களில், ஆன்லைன் கவுன்சிலிங் உதவிமையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாணவர்கள்,தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப் பங்கள் ஏற்புக்கு பின், தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விருப்ப இடங்களை பதிவு செய்யும் முறை அறிமுகம்செய்யப்படும். பின், அவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைக்கு ஏற்ப, இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்படும்.வழிகாட்டல்: எனவே, வரும் கல்வி ஆண்டில் மாணவர் களும், பெற்றோரும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்திற்குவர வேண்டிய கட்டாயம் இல்லை. எங்கேயும் அலையாமல், கணினி முன் இருந்து, கல்லுாரியை தேர்வு செய்யலாம். ‘இதற்கான வழிகாட்டல் மற்றும் அறிவிப்புகள், பிப்ரவரி யில் அறிவிக்கப்படும்’ என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்