பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசுகண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி கிருபாகரன் தலைமையினா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கண்காட்சி நடத்துவதற்கு 90 சதவீத ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளதால் திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் கண்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது.மேலும் வரும் காலங்களில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்த தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இதுகுறித்து அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்! – மத்திய அரசு

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் சாப்பிட தேசிய ஊட்டச்சத்து மிஷன் அடிப்படையில் ஆதார் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்து முறையாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அரசின் வளங்கள் சுரண்டப்படுவதையும், குழந்தைகளுக்கு முறையாக அரசின் வளங்களைக் கொண்டுசேர்ப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அசாம் மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலியான பெயர்களைப் பயன்படுத்தி அங்கன்வாடி உணவுகள் வீணாகின்றன. இதனால், அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் இல்லை என்பதால், இந்தத் திட்டத்திற்காக வயது வரம்பை மூன்றாக குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகள் தினமும் ஆதார் கொண்டு செல்லத் தேவையில்லை என்றும், அதைப் பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.