தமிழக பட்ஜெட் 2019 – உடனடி தகவல்கள்..! – பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்…

வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

* பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்

2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் – துணை முதலமைச்சர்

* வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்

பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு

மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு – துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – துணை முதலமைச்சர்

* ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை – துணை முதலமைச்சர்

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை!

அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை

ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.
வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.

பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.

ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.

இவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன்   முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள
தாக தெரிகிறது.

EMIS
தற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..!!

ஏன் தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை
EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது.
அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.

அதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.
நாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..??

அதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சரி இதனால் என்ன பயம்.
ஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.
அதாவது…
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அவரவர்  கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.

விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான்  அடுத்த ஆசிரியர்  பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.

முன்னரே…
அதாவது…
ஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.

அதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர்
போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.

இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.

அதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்

QR  கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.

ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR  கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து  கண்காணிக்கப்படும்.

அவர் QR  கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.

பாடம் சம்மந்தப்பட்ட QR  கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு
ஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை EMIS,DISE தரவுகளுடன்  இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.

இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும்  பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.

இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.

அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக  தினமும் காலை மாலை  என  விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.

ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.

இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.

நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை  கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.

உண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..

ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.

இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..

வரவேற்போம்.. மாற்றத்தை…

இன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..

தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இது குறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:  பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நலத் திட்டங்களும், முயற்சிகளும் அண்மைக்காலமாக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதன் விளைவாக,  கற்றல் திறன் மேம்பட்டுள்ளதுடன் தொடக்க நிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை விகிதம் 99.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2011-2012-ஆம் நிதியாண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2018-2019-ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையின்படி (அநஉத) அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் ஒட்டுமொத்தமாக முன்னேறியுள்ளது என்பதுடன் தனியார் பள்ளி மாணவ, மாணவியருடன் ஒப்பிடும்போது, அரசுப்பள்ளி மாணவர்கள் கூடுதல் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.
விலையில்லா பொருள்கள்:  புத்தகப் பைகள்,  நோட்டுப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்பட மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் நலத் திட்டங்களுக்காக 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.1,656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று அரசுப் பள்ளிகளுக்கு போதுமான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில் வகுப்பறைகள் கட்டுதல்,  ஆய்வகங்கள்,  கழிப்பறைகள்,  பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது

‘5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வா?’ பழங்குடி பகுதி ஆசிரியையின் அதிர்ச்சி கடிதம்!

“இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா?”
APP-ல் படிக்க
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்குத் தமிழக கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இப்புதிய திட்டத்தை எதிர்த்து பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்து தங்களின் எதிர்வினையை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் எதிர்க்கும் முக்கியமான அம்சம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு என்பதை. சமீபத்தில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதுவும் இந்த ஆண்டு முதலே நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு ஆதரவு என்பது ஒரு புறம் இருந்தாலும், எதிர்ப்பு வலுவாக இருந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி மக்கள் அதிகம் வாழுமிடம். அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் மகாலட்சுமி அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவிக்கிறார். மேலும், அவரின் கருத்தை ஒரு கடிதமாக அளித்திருந்தார்.

5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பவர்களுக்கு, வணக்கம்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு முதலில் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். இந்த முடிவு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதை இவ்வரசு எடுத்திருக்கிறதோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009), நடைமுறை ஏப்ரல் 1, 2010-ன் படி நான்கு விஷயங்கள் மிக முக்கியமானவை.

* 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

* இவ்வாறு சேர்க்கப்படும்
குழந்தைகளிடம் வயதுச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட எந்தச் சான்றிதழையும் கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது.

* தேர்வு எதையும் வைக்கக் கூடாது.

* சேர்க்கை மறுப்பு எவ்வகையிலும் கூடாது.

சட்டம் இப்படி வரையறுத்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் தமிழக அரசு கட்டாய பொதுத்தேர்வை வைக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. கல்வி அளிப்பதும் கல்வி பெறுவதும் கட்டாயம். ஆனால், சாமானியக் குழந்தைகளிடமிருந்து கல்வியைப் பறிக்கும் நிலைதான் இன்று உருவாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 99.9 சதவிகிதம் பழங்குடியின மக்கள் மட்டும்தான். இவர்களுக்கென்று சொந்தமாகப் பட்டா நிலம் வைத்திருப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. வன உரிமைச் சட்டத்தின்படி காட்டைச் சீரமைத்து, பயிர் செய்து மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வனத்துறையிடமே ஒப்படைத்துவிடுவர். விவசாய அறுவடை முடிந்ததும் கேரளாவுக்கு மிளகு எடுக்கச் செல்வார். வேறு வேலை இல்லாத பட்சத்தில் வேறு வழியுமில்லை. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் செல்பவர்கள் ஏப்ரல் மாதம்தான் வருவர். குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோர்களும் இதில் விதிவிலக்கு இல்லை. கைக்குழந்தை வைத்திருந்தால் அந்தக் குழந்தையை வைத்துக்கொள்ள வளர்ந்த, பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தாலும் உடன் அழைத்துச் செல்கின்றனர். ஒருவேளை குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு சென்றாலும் பார்த்துக்கொள்ள ஆளில்லை.

அந்த ஐந்து மாதங்களில் சம்பாதித்து வருவதை வைத்துதான் ஓராண்டு முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவாவது அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுக்கான ஆதாரம். இப்படி வாழ்வாதாரத்துக்காக ஓடி உழைத்து வாழும் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் ஜவ்வாதுமலையில் வாழும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா? கேரளா சென்று வந்த உடனே பொதுத்தேர்வா என அஞ்சி ஒரேடியாகப் பள்ளியைவிட்டு ஓடவைக்கும் சூழலைத்தான் கல்வித்துறை உருவாக்கப்போகிறதா?

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இன்றளவும் எங்கள் பள்ளியில் நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது. இனிமேலும் நடக்கும். படிக்க விரும்பும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தச் சட்டமே துணையாய் இருந்துவருகிறது. என்னைப் போன்ற எத்தனையோ ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் பல்வேறு குழந்தைகளுக்குக் கல்வியை வழங்கி வருகின்றனர். உதாரணத்துக்கு சிவரஞ்சனியைப் பற்றிச் சொல்கிறேன்.

2016-17-ம் கல்வி ஆண்டில், எங்கள் ஊரின் டெய்லர் ராமகிருஷ்ணன் அண்ணன், 12 வயதுள்ள ஒரு பெண் குழந்தையும் அவரின் அம்மாவையும் அழைத்துவந்து, `டீச்சர், இவங்க எனக்குத் தூரத்து சொந்தம். இந்தக் குட்டிபொண்ணோட அப்பா, மாடு முட்டி இறந்துட்டாரு. கடன் தொல்லை அதிகமாயிருந்ததால், இவங்க குடும்பத்தோட கேரளாவுக்குப் போய் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரிதான். இப்போ ஓரளவு கடனை அடச்சிட்டாங்க. இந்தப் பொண்ணு, படிக்க ஆசைப்படறதா இவங்க சொன்னாங்க. நீங்க இருக்கும் தைரியத்துல அழைச்சிட்டு வந்துட்டேன். எப்படியாவது பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கோங்க’’ என்றார். நான் அந்தச் சிறுமியிடம் பேசினேன்.

`ஏன்டாம்மா, நீங்க கேரளாவுல பள்ளிக்கூடத்துக்கு எதாவது போனிங்களா?’’

“இல்லிங்க மிஸ்.’’

“இப்போ 5-ம் வகுப்புல சேர்த்தா உங்களால படிக்க முடியுமா?’’

“கண்டிப்பா முடியும் மிஸ். எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு மிஸ். எப்படியாவது என்னைச் சேர்த்துக்கோங்க’’ என்றாள் நம்பிக்கையோடு. நான் ராமகிருஷ்ணன் அண்ணனிடம்,

“இவங்க அம்மா இங்கேயே இருப்பாங்களா இல்ல, மறுபடியும் கேரளாவுக்குப் போய்டுவாங்களா?’’

“போய்டுவாங்க மிஸ்.’’

“அப்போ. ஸ்கூல் லீவ் விட்டா யார் வீட்டுக்கு இந்தக் குழந்தை போகும்?’’

“அவங்க சித்தி இருக்காங்க. அவங்க வீட்டுக்குப் போய்டும் டீச்சர்.’’

“சரிங்க அண்ணா. பள்ளியில சேர்த்துடலாம். அதுக்காகத் தனியா சட்டமே இருக்கு. பார்த்துக்கலாம் விடுங்க’’ என்று தைரியம் கூறினேன்.

அந்தக் குழந்தையின் அம்மா, “ரெண்டு ஆம்பள பசங்களும் இருக்கானுங்க. ஒருத்தனுக்கு 5 வயசு, இன்னொருத்தனுக்கு 6 வயசு. இன்னும் ஒருமாசம் கழிச்சிக் கூட்டிட்டு வந்தா பள்ளிக்கூடத்துல சேர்த்துப்பீங்களா?’’ என்று கேட்டார். `தாராளமாக அழைச்சிட்டு வாங்க’ என்று கூறி அனுப்பினேன்.

இப்படி வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்த குழந்தைதான் சிவரஞ்சனி. பள்ளியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் தமிழை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் சிறுசிறு வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தார். கொத்தடிமையாய் சிறுவயதிலிருந்தே கடனை அடைக்கும் தொழிலாளியாக இருந்ததால், அவளுக்கு வாழ்க்கைக் கணக்கின் மூலமே அடிப்படை கணிதச் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்க, சீக்கிரமே பழகிக்கொண்டார். முதலிரண்டு வகுப்புப் பயிலும் சில குழந்தைகளைக் குளிக்க வைத்தல், துணி துவைத்துக்கொடுப்பது, சாப்பாடு ஊட்டிவிடுவது, தலைசீவி விடுவது என நிறைய உதவிகளை இன்றளவும் செய்துவருகிறார். நடனம், பாட்டு, கதை எழுதுதல், ஓவியம் எனத் தன்னால் இயன்ற அனைத்திலும் சிறப்பாகப் பங்கெடுக்கிறார்.
உள்வாங்கும் திறனும், அதை வெளிப்படுத்தும் அபாரம் அவளுக்கு. எப்படியாவது கல்வி கற்று, சாதித்துவிட வேண்டுமென்ற முழுமூச்சில் களத்தில் இருக்கிறார். இப்போது 7-ம் வகுப்பில் படித்து வருகிறாள். அன்று கொத்தடிமைத் தொழிலாளி… இன்று குழு ஆசிரியர்.

நிறைய குழந்தைகளை இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 2, 3 & 4-ம் வகுப்புகளில் நேரடியாகச் சேர்த்திருக்கிறேன். ஆனால், சிவரஞ்சினிதான் 5-ம் வகுப்புக்கு முதல் அனுபவமாக அமைந்தார் எனக்கு.

எத்தனை குழந்தைகள் சிவரஞ்சினிபோல வேகமாகக் கற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா? ஒருவேளை இப்போது கல்வித்துறை அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு அன்று இருந்திருந்தால் அவளால், 5-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், அவள் இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள்? மீண்டும் ஒரு குழந்தைத் தொழிலாளியாகக்கூட போயிருக்கலாம் இல்லையா? அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

ஒரு வகுப்பில் பயிலும் 10 விழுக்காடு குழந்தைகள் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளாக இருப்பார்கள் என. பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. படிக்க இயலாத எத்தனைக் குழந்தைகளுக்கு  dyslexia, dysgraphia, dyscalculia மற்றும்  A.D.D (Attention Deficit Disorder) இருக்கிறது என்று நுணுக்கமாகக் கண்டறியப்பட பணிகள் எவ்வளவோ இருக்கிறது! அவற்றையெல்லாம் களைவதை விடுத்து, அடித்தட்டுக் குழந்தைகள் இந்தத் தேர்வுகளை நடத்துவது அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் கல்வியைக் கருவிலேயே அழிப்பதற்குச் சமமாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் உட்கிரகிக்கும் திறன் வேறுபடும். கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. உளவியல் சார்ந்த பல்வேறு காரணங்களை ஒவ்வொரு குழந்தையின் கற்றலுக்கும் பொருத்தலாம். மெதுவாகக் கற்கும் குழந்தைகளைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம் தங்களின் அதிகார முடிவுகளால் என்பதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

எழுத்துத் தேர்வு மட்டுமே அறிவு என நம்பிக்கொண்டிருக்கும் இந்தக் கல்வி முறையில், அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பது தற்போது புதைக்கப்படும் அபாயத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு, புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் என்னும் தலைப்பில் உரையாடுவது போன்று உள்ளது தமிழகக் கல்வித்துறையின் 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது. கடைக்கோடி கிராமங்களின், வனவிலங்குகள் நடமாடும் உள்மலை கிராமங்களின் குழந்தைகளை மனதில் நிறுத்தி இந்த முடிவை நிறுத்தி வையுங்கள்.

புதிதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் உருவாக்கம் – தமிழக அரசு

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.28,757.62 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் கல்விஇயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள ரூ.2,109.08 கோடி மற்றும் 1,092.22 கோடியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

ஆனாலும், மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனைக் கருதி, இத்திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்தஇரண்டு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2019-20-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். இதனை செயல்படுத்த2019-20-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.2,791 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை இந்த அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்துக்கு 2019-20-ம் ஆண்டு வரவுச்-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.248.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு 2019-20-ம் ஆண்டு வரவுச்-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை – அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாடு முழுவதும் பொறியியல் படிப்புப் படித்த 80 இலட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு இலட்சத்து 68ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கும் முறையை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்

கல்வி தரம் குறைய கல்விதுறை அதிகாரிகளே காரணம்: நீதிபதி

தமிழகத்தில் கல்வி தரம் குறைய கல்வித்துறை அதிகாரிகளே காரணம் என ஐகோர்ட் கிளை நீதிபதி கூறினார்.

ஆசிரியை வசந்தி என்பவர் தன்னுடைய தலைமை ஆசிரியை பதவி உயர்வை கல்வி அதிகாரி அங்கீகரிக்கவில்லைஎன கூறி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். வழக்கில் கல்வி அலுவலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவுஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் நீதிபதி தெரிவித்திருப்பதாவது:

தலைமை ஆசிரியையின் பதவி உயர்வை அங்கீகரித்து 2 வாரங்களில் பணப்பலன்களை வழங்க வேண்டும். வழக்கில்தென்காசி மாவட்ட கல்விஅலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் அபராதத்தை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு 10 நாட்களில் வழங்க வேண்டும். அபராதம் விதிக்கப்பட்டதை அலுவலரின் பணி பதிவேட்டில் பதிய வேண்டும். மேலும் இது போன்ற உத்தரவு தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுகள்; எந்தெந்த வழிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன?- ஆசிரியர்கள், அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,
இத்துறையில் எந்தெந்தவழிகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆசிரியர்கள் பல்வேறுதகவல்களை தெரிவித்துள்ளனர்.

கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளியின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். மாணவர்களுக்கான ‘தேன் சிட்டு’ மாத இதழ்தயாரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி, புதியபாடத்திட்ட தயாரிப்பு திட்டத்துக்கானநிதி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஆன்லைன் மூலமாக தமிழ்கற்றுக்கொடுக்கும் ‘உலகமெல்லாம் தமிழ்’ திட்ட நிதி போன்றவை தவறாகபயன்படுத்தப் பட்டிருப்பதாக லஞ்சஒழிப்புத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.பள்ளிகளில் கட்டிடம், ஆய்வகம்,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி, இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, காலணி, லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட 14 விதமான நலத்திட்டங்கள், ஸ்மார்ட் கிளாஸ் என வெவ்வேறு திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெவ்வேறு துறைகள் மூலம் அவை நிறைவேற்றப்படுகின்றன. மேலும், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, பணியிடைப் பயிற்சி, கற்பித்தல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி மீது சுமத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். தங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பாத நிலையில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:பொதுவாக பள்ளிக்கல்வித் துறையில் எழும் முதன்மையான குற்றச்சாட்டு ஆசிரியர் இடமாறுதலில் நடக்கும் முறைகேடுகள். பணிமூப்பு உட்படஇடமாறுதலுக்கென பல்வேறு விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் மீறி தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கேட்கின்ற இடத்துக்கு இடமாறுதல் கொடுத்துவிடுகிறார்கள். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்படுகின்றன. மேலும், நிர்வாக இடமாறுதல் என்ற பெயரிலும் கணிசமான இடமாற்றங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுஇடமாறுதல் நேரத்தில் கலந்தாய்வின்போது முறைகேடு என்று சொல்லி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், மறியலில் இறங்குவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன.

வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அப்பணியை ஒதுக்கீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துவிட முடியாது. இதேபோல, இலவச சீருடை, நோட்டுகள், காலணி, ஸ்கூல் பேக், சைக்கிள், லேப்டாப் என 14 விதமான பொருட்களைகொள்முதல் செய்வதிலும் இதே குற்றச்சாட்டு எழாமல் இல்லை.பெரும்பாலான நேரங்களில் அரசியல் தலையீட்டின் காரணமாக, சரியான பாதையில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைக்கு உயர்அதிகாரிகள் தள்ளப்படுகிறார்கள். இந்த வேலையை இன்னாருக்கு கொடுங்கள் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தும்போது வேறுவழியின்றி அதைச்செய்ய வேண்டிய நிலை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

366 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போதிய விளையாட்டு மைதானம் இல்லை, கழிவறை, குடிநீர், தீ தடுப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், கூடுதல் கட்டணம் வசூலித்து அங்கீகார விதிகளை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மே மாதத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்வுகள் நெருங்கி உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்கிடையே, பல பள்ளிகள் அரசு விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனி ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ…

பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்வி கூடங்களில் கணினி மயாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகள்ளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய பள்ளிகளில் சனி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி காலையும், மாலையும் கூட சிறப்பு வகுப்புக்கள் நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம். அத்துடன் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது ’’ என அவர் தெரிவித்தார்.