கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுகள்; எந்தெந்த வழிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன?- ஆசிரியர்கள், அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,
இத்துறையில் எந்தெந்தவழிகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆசிரியர்கள் பல்வேறுதகவல்களை தெரிவித்துள்ளனர்.

கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளியின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். மாணவர்களுக்கான ‘தேன் சிட்டு’ மாத இதழ்தயாரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி, புதியபாடத்திட்ட தயாரிப்பு திட்டத்துக்கானநிதி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஆன்லைன் மூலமாக தமிழ்கற்றுக்கொடுக்கும் ‘உலகமெல்லாம் தமிழ்’ திட்ட நிதி போன்றவை தவறாகபயன்படுத்தப் பட்டிருப்பதாக லஞ்சஒழிப்புத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.பள்ளிகளில் கட்டிடம், ஆய்வகம்,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி, இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, காலணி, லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட 14 விதமான நலத்திட்டங்கள், ஸ்மார்ட் கிளாஸ் என வெவ்வேறு திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெவ்வேறு துறைகள் மூலம் அவை நிறைவேற்றப்படுகின்றன. மேலும், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, பணியிடைப் பயிற்சி, கற்பித்தல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி மீது சுமத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். தங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பாத நிலையில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:பொதுவாக பள்ளிக்கல்வித் துறையில் எழும் முதன்மையான குற்றச்சாட்டு ஆசிரியர் இடமாறுதலில் நடக்கும் முறைகேடுகள். பணிமூப்பு உட்படஇடமாறுதலுக்கென பல்வேறு விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் மீறி தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கேட்கின்ற இடத்துக்கு இடமாறுதல் கொடுத்துவிடுகிறார்கள். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்படுகின்றன. மேலும், நிர்வாக இடமாறுதல் என்ற பெயரிலும் கணிசமான இடமாற்றங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுஇடமாறுதல் நேரத்தில் கலந்தாய்வின்போது முறைகேடு என்று சொல்லி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், மறியலில் இறங்குவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன.

வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அப்பணியை ஒதுக்கீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துவிட முடியாது. இதேபோல, இலவச சீருடை, நோட்டுகள், காலணி, ஸ்கூல் பேக், சைக்கிள், லேப்டாப் என 14 விதமான பொருட்களைகொள்முதல் செய்வதிலும் இதே குற்றச்சாட்டு எழாமல் இல்லை.பெரும்பாலான நேரங்களில் அரசியல் தலையீட்டின் காரணமாக, சரியான பாதையில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைக்கு உயர்அதிகாரிகள் தள்ளப்படுகிறார்கள். இந்த வேலையை இன்னாருக்கு கொடுங்கள் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தும்போது வேறுவழியின்றி அதைச்செய்ய வேண்டிய நிலை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

366 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போதிய விளையாட்டு மைதானம் இல்லை, கழிவறை, குடிநீர், தீ தடுப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், கூடுதல் கட்டணம் வசூலித்து அங்கீகார விதிகளை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மே மாதத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்வுகள் நெருங்கி உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்கிடையே, பல பள்ளிகள் அரசு விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனி ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ…

பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்வி கூடங்களில் கணினி மயாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகள்ளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய பள்ளிகளில் சனி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி காலையும், மாலையும் கூட சிறப்பு வகுப்புக்கள் நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம். அத்துடன் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது ’’ என அவர் தெரிவித்தார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு புது சிக்கல் !

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடப்பது போல இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தன. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வைக் கணக்கில் கொண்டு மாணவர்களும் பள்ளிகளும் 11 ஆம் வகுப்பைப் பாடங்களைப் படிக்காமல் நேரடியாக 12 ஆம் வகுப்புப் பாடங்களைப் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை நடைமுறையில் உள்ளது. ஒன்பதாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தோல்வி அடையச்செய்யாமல் வெற்றிப் பெற வைக்கும் இந்த முறையால் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவ, மாணவிகள், அடுத்த இரண்டு மாதங்களிலேயே மறுத்தேர்வை எழுதலாம் என்றும் அதிலும் தோல்வி அடையும் மாணவர்கள், அதே வகுப்பில் தொடர்ந்து இன்னொரு ஆண்டு படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சம் அதிகமாகும் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்காத பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிப்.21-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காததற்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

மழலையர் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை

மழலையர் பள்ளிகளில் சரியான முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும், இப்பள்ளிகளில் பாடம் கற்பிக்க சரியான ஆசிரியர்கள் நியமிக்கப் படாததால், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் எதற்காக தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும் ஆபத்து உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடத்தை மட்டும் கற்பித்தால் போதுமானது.
ஆனால், மழலையர் வகுப்புகளை அதுபோன்று கையாண்டு விட முடியாது. மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம். இதுதான் மாண்டிசோரி முறையிலான கல்வியாகும். இந்த தத்துவங்களின் அடிப்படையில் குழந்தைகளை கையாள்வது இடைநிலை ஆசிரியர்களால் சாத்தியமல்ல. மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் தான் இது சாத்தியமாகும்.
எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வராமல் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளையும் கட்டாயம் திறக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.  பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தால் 80 சதவீதம் அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. விழுப்புரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டனர்.

இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், போராட்டம் காரணமாக அரசு பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளிகளை திறந்து வைத்து பள்ளி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

நான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா?” ஆசிரியை ஆதங்கம்!

சமீபத்தில் தமிழக அரசு எடுத்திருக்கும் ஒரு முடிவு, ஆசிரியர்கள் மத்தியில் பலத்த அதிர்வையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையங்களைப்  பள்ளியோடு இணைத்து, கேஜி வகுப்புகள் தொடங்கும் அரசின் திட்டத்திற்கு புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், உபரி ஆசிரியர்களை அங்கு  பணி மாற்றம் செய்யவிருக்கிறது அரசு.

இதனால், பலரும் பாதிக்கப்படுவதாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர். பாதிக்கப்படும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பேசினேன்.

“இந்தத் திட்டத்தில், உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்துவதாகக் கூறியிருந்தார்கள். ஆனால், என்னையும் அங்கன் வாடிக்கு மாற்றியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் பள்ளியில் 40 + மாணவர்கள், என்னையும் சேர்த்து இரண்டு ஆசிரியர்கள்தான்.

30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே அரசின் கணக்கு. அப்படியெனில், நான் எப்படி உபரி ஆசிரியராவேன். நான் மட்டுமல்ல, கறம்பக்குடி ஒன்றியத்தில் ஒரேயொரு உபரி ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். ஆனால், 12 ஆசிரியர்கள் இந்தப் பணி மாறுதலுக்கு உள்ளாகியுள்ளனர். அது எப்படி?

சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய ஆசிரியர் தேர்வில் போட்டிபோட்டு, சுமார் 10 ஆயிரம் பேர் தேர்வாகி வந்தோம். இப்படி சிரமப்பட்டு வந்தது, அங்கன்வாடிக்குச் செல்லத்தானா? மேலும், கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி முறை என்றும் சொல்கிறார்கள்.

எனவே, அந்தக் குழந்தைகளைக் கையாளும் விதங்களை நாங்கள் படிக்கவில்லை. எங்களைப் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றப்போவதாகவும் தகவல்களைக் கேள்விப்படுகிறோம் . இது எங்களின் பணி உயர்வு, இடம் மாறுதல் உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பாதிக்கும். இதெல்லாம் யோசிக்கையில் மனச்சோர்வாகிறது.

நான் அங்கன்வாடி மையத்துக்குப் போய்விட்டால்,  என் வகுப்பை யார் கவனிப்பார்கள்? ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள 47 மாணவர்களை ஒரு ஆசிரியரால் எப்படிக் கையாள முடியும்?

ஒருவேளை என் இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்தால், அதை எப்படி எடுத்துக்கொள்வது? அந்த வேலைக்குத் தகுதியுடையவர் என்றுதானே என்னைத் தேர்வுசெய்தார்கள். பி.ஜி முடித்து, பி.எட் படித்த என் கல்விக்கு என்ன மதிப்பு?” என்று ஆதங்கத்துடன் முடிக்கிறார்

தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்: அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும். 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் . அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் வரையில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம்.

12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவிகள் 500 பேர் வரை ஆடிட்டிங் பிரிவு பட்டப்படிப்பில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்

ஜாக்டோ ஜியோ’ போராட்டம் : தேர்வுகள், அரசு பணிகள் முடங்கும் அபாயம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான, ‘ஜாக்டோ ஜியோ’ நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது. இதனால், அரசு பணிகள், பொதுத் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.’பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்’ என்பன உள்ளிட்ட, பல கோரிக்கைகளை, ஜாக்டோ ஜியோ முன் வைத்துள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதா என்பது குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சாந்தஷீலா நாயர் தலைமையில், 2016ல் நிபுணர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, காலாவதியானதால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் தலைமையில், புதிய கமிட்டி அமைத்து, ஆய்வு செய்யப்பட்டது.இந்த கமிட்டியின் அறிக்கை, 2018, நவ., 27ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான, சித்திக் கமிட்டியின் அறிக்கை, இந்த ஆண்டு, ஜன., 5ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கைகள் வந்த பின்பும், அரசு தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, ஜாக்டோ ஜியோ துவக்க உள்ளது. எனவே, இந்த அமைப்பு, ‘போராட்டம் நடத்த மாட்டோம்’ என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அளித்திருந்த வாக்குறுதியை திரும்ப பெற்றுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, உயர்கல்வி துறை, நகர் நிர்வாக துறை, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள், போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த போராட்டத்தில், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் உட்பட, 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.பள்ளிகளில், பிப்., 1ல் செய்முறை தேர்வும், மார்ச், 1 முதல் பொதுத்தேர்வும் துவங்கும் நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால், தேர்வு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல, அரசு பணிகளும், அரசு துறை அலுவலக பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.’போராட்டம் வேண்டாம்’பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:’ஜாக்டோ ஜியோ போராட்டத்தில், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம்’ என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் துவங்க உள்ளன. மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. எனவே, எங்கள் கோரிக்கையை, ஆசிரியர்கள் ஏற்பர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்