‘மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது’ : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை’

‘மாணவ – மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என,பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புகார் :

பள்ளி, கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள் மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பள்ளிகளில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் பழகும் தன்மை ஆகியவையும் மாறியுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடிப்பது, கடுமையான வார்த்தைகளால் பேசுவது போன்றவற்றுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி, மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு, கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களே,மாணவர்களிடத்தில் கோஷ்டியை உருவாக்கி, தவறாக வழிநடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வேண்டாத பெற்றோரின் பிள்ளைகள், தங்களுக்கு பணிவிடை செய்யாத மாணவ – மாணவியரை, குறிப்பிட்ட மாணவர்களுடன் இணைத்து, ஒழுக்க குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், மாணவ – மாணவியர் சிலரை தவறாக பேசி, அடித்துள்ளனர்.

நடவடிக்கை :

தேர்வுகளில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்ட சில மாணவியர், தேர்வு துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் முற்றுகையிட்டு, ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்கள் சிலர், தரக்குறைவாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.’மாணவர்கள், இளம் வயதினர் என்பதால், அவர்களை பக்குவமாக கையாண்டு, திருத்த வேண்டும். அதை செய்ய முடியாத ஆசிரியர்கள், பாடம் நடத்தி விட்டு, பெற்றோருக்கோ, தலைமை ஆசிரியரிடமோ, மாணவர்களின் நடத்தை குறித்து தகவல் அளிக்கலாம். ‘மாறாக, மாணவ – மாணவியரை கிண்டல் செய்வது, அவர்களின் மனம் புண்படும்படி, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. ‘மீறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என, எச்சரித்துள்ளனர்

இன்ஜி., படிப்புக்கு, ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன்சென்னைக்கு வரவேண்டாம்!

இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்’என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி, மாணவர்களும், பெற்றோரும், பெட்டி, படுக்கையுடன், சென்னைக்கு வர தேவையில்லை.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், தமிழக அரசின் சார்பில், பொது கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

ஒற்றை சாளர முறையில் நடக்கும் இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இதற்காக, சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு, மாணவியர், அவர்களின் பெற்றோர் தங்குவதற்கு, இலவச விடுதி வசதி செய்யப்படும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு நபருக்கு, அரசு பஸ்சில் சென்னைக்கு வர, இலவச கட்டண சலுகை தரப்படும்.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனுக்கு மாற்றப்படுகிறது. இதை, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், நேற்று உறுதி செய்தார்.

இதற்கான ஏற்பாடுகள், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் துறை தலைவரும், ராமானுஜன் கணினி மைய இயக்குனருமான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், கவுன்சிலிங் கமிட்டி உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில், கவுன்சிலிங் பணிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின்வசதிக்காக, 32 மாவட்டங்களிலும், கவுன்சிலிங் உதவி கணினி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இந்த மையங்களில், கணினியுடன், உயர்தர இணையதள வசதி செய்யப்பட்டிருக்கும். மாணவர்கள் அங்கு சென்று, சேர்க்கையில் பங்கேற்கலாம்.

மேலும், வீட்டில் இணையதளத்துடன் கூடிய, கணினி வசதியுள்ள மாணவர்கள், வீட்டில் இருந்தவாறே கல்லுாரியையும், பாட பிரிவையும் தேர்வு செய்யலாம்.கவுன்சிலிங் மையத்தில், தனியார் கல்லுாரி தரகர்கள் முகாமிட்டு, மாணவர்களை தங்கள் கல்லுாரிகளில் சேர வைக்கும் பிரச்னைகளுக்கு, இனி இடம் இருக்காது. கவுன்சிலிங்கிற்காக, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளுக்கான செலவுகளும் குறையும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்!!!

தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு

அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் எழுதும் பணிகளை முடிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், ௧ – 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 14 ஆண்டுகளாகவும் பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை.
எனவே, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும் அளவுக்கு, பாடத்திட்டங்களை மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
அதன்பின், சில மாற்றங்கள் செய்து, இறுதி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கும், பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலாகிறது.
எனவே, முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு அமலாகும் வகுப்புகளுக்கான புத்தக தயாரிப்பு பணிகளை விரைவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மாதத்துக்குள், புத்தக பணிகளை முடித்து, தமிழ்நாடு பாடநுால் கழகத்திடம், புத்தக அச்சடிப்பு பணிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

நெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்… சி.பி.எஸ்.இ அறிவிப்பு!!!

டெல்லி: தேசிய தகுதித் தேர்வு எழுத வயது
வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக பணியாற்றவும், ஜூனியர் ஆய்வு மாணவராக சேரவும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ அமைப்பு இந்த தேர்வை கண்காணித்து வருகிறது.

இந்த தேர்வு முறையில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேலும் இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகைக்கான தகுதித் தேர்வை எழுதுவோருக்கும் வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த தேர்வு பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நெட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அதே போல் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் மத்திய, மாநில பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும் என ஜவடேகர் உறுதி

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுவதற்கு விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடப்பாண்டு 2018 நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவித்தார். இது மாநில பாடத்திட்டத்தின் கீழ்பயின்ற பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது.இந்த சூழலில் நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில்  கடந்தாண்டு பாடத்திட்டத்தின்படியே, நடப்பாண்டிலும் நீட் தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

இது தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அரசியல் கட்சிகள் தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும்ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்து உள்ளார் என மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிஉள்ளார்.

நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்து உள்ளார் எனவும்  தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டு உள்ளார்

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல்வர் பெருமிதம்

”தமிழகத்தில், மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்வி நிலையில், 99.85 சதவீதம்; நடுநிலைக் கல்வியில், 99.20சதவீதமாக உயர்ந்துள்ளது,” என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை, சி.கந்தசாமி நாயுடு கல்லுாரி வளாகத்தில், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், ‘அம்மா அரங்கம்’ கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, அறக்கட்டளை தலைவர், ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. அரங்கத்தை திறந்து வைத்து, 21 ஜோடிகளுக்கு, இலவச திருமணம் நடத்தி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், கடலுார், சிதம்பரம் ஆகிய இடங்களில், ஆறு கல்லுாரிகளும், ஆறு உயர்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. அவர்களின் கல்விப் பணியை பாராட்டுகிறேன். ஒரு நாடு சிறந்து விளங்க, கல்வியும், சுகாதாரமும் அவசியம். எனவே, அறக்கட்டளையின் கல்விப் பணி தொடர வாழ்த்துகிறேன். பள்ளிக் கல்வித் துறைக்கு, தமிழக அரசு, ஆறு ஆண்டுகளில், 1.37 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.ஏழு ஆண்டுகளில், 1,599 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்விநிலையில், 99.85 சதவீதம்; நடுநிலைக் கல்வியில், 99.20சதவீதமாக உயர்ந்துள்ளது.ஜெ., வழியில், தமிழக அரசு, எட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், மூன்று பல்கலை உறுப்பு கல்லுாரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லுாரியையும் நிறுவியுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்

Flash News : “கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது” – பள்ளி கல்வித் துறை

வரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது – பள்ளி கல்வித் துறை

“கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது”

* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது

 

Flash News : NEET Exam Date Announced

NEET Exam – மே 6 ந்தேதி நடைபெறும் – CBSC இணை ஆணையர் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 2018 ம் ஆண்டிற்கான நீட் தேர்வுகள் மே 6 ம் தேதி நடைபெறுகிறது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

EMIS – செய்தி துளிகள்

* 25.1.18 க்குள் EMIS/AADHAAR சேர்ப்பு பணியை முடிக்கும் படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

* மாணவர்கள் common pool ல் இல்லை என்றால் student search ல் மாணவனின் EMIS or Date birth & Name ஐ search செய்தால் அந்த மாணவனின் தகவல் சிறிய கட்டத்தில் காண்பிக்கும்.*

* அதில் வருகிற EMIS Number ஐ click செய்தால் மேலே Release/Request என்ற option வரும்.*

* அதை click செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு Request செல்லும்.*

* மூன்று நாளைக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாணவன் District user மூலமாக common pool க்கு மாற்றப்படுவான்.*

* பிறகு நாம் Admit செய்து கொள்ளலாம்.*

* 25.1.18 க்கு பிறகு EMIS Browser முடக்கப்படும் என்ற தகவல் Video conference மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

* இறுதி வாய்ப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

* ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் எண்ணிக்கையும் EMIS பதிவையும் சரிபார்த்து கொள்ளவும்.*

* Double entry இருந்தால் Delete or Transfer செய்து விடுங்கள்.*

ஆங்கில பாட புத்தகத்தில் அப்துல் கலாம் சுயசரிதை

பள்ளிகளில், ஆங்கில பாட புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சுயசரிதையிலிருந்து, சில பகுதிகளை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மத்திய மற்றும் மாநில கல்வி துறைகளில், பாட புத்தகங்கள் குறித்து ஆலோசனை வழங்கும், சி.ஏ.பி.இ., எனப்படும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின், இரண்டு நாள் கூட்டம், டில்லியில், இன்று துவங்குகிறது.இது பற்றி வாரிய உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: மத்திய மற்றும் மாநில உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியங்களின் ஆங்கில பாட புத்தகங்களில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சுயசரிதையிலிருந்து, சில பகுதிகளை சேர்க்க, ௨௦௧௭ம் ஆண்டிலேயே ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி, இந்த கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.மேலும், மருத்துவ அறிவியல் தொடர்பாக, குறுகிய கால சான்றிதழ் படிப்பு துவக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதலுதவி, மருத்துவமனை மேலாண்மை, வார்டு மேலாண்மை, ஆகியவற்றை, இந்த சான்றிதழ் படிப்பில் சேர்க்கவும் ஆலோசிக்கப்பட்டு, இந்த கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும். கல்வி உரிமை சட்டத்தை விரிவுப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்