‘டாக்சிகாலஜி’

 

தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயனங்கள் மற்றும் அவை உயிரினங்களின் உடம்பில் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை கற்பிக்கும் படிப்பு, ‘டாக்சிகாலஜி’!

 

நச்சு பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் மற்றும் நச்சுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ‘டாக்சிகாலஜி’ கொண்டுள்ளது. இவைமட்டுமின்றி, வேதியியல், உயிரியல் மற்றும் மருந்தியல் ஆகிய பாடங்களுடன் இணை பிரிவாகவும் இது உள்ளது.

 

 

இத்துறையில், அக்குவாட்டிக் டாக்சிகாலஜி, கெமிக்கல் டாக்சிகாலஜி, மெடிக்கல் டாக்சிகாலஜி, என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி, கிளினிக்கல் டாக்சிகாலஜி, இகோ – டாக்சிகாலஜி, பாரன்சிக் டாக்சிகாலஜி, ஆக்குபேஷன் டாக்சிகாலஜி மற்றும் டாக்சிக்யோமிக்ஸ் ஆகிய பிரிவுகள் உள்ளடங்கும். பல உட்பிரிவுகளை கொண்டுள்ள மகத்தான துறையாக, ‘டாக்சிகாலஜி’ இருப்பதால் மாணவர்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பாடப்பிரிவை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்வு செய்து படிக்கலாம்.

 

முக்கிய படிப்புகள்

பி.எஸ்சி., டாக்சிகாலஜி அல்லது பயலோஜிகல் சயின்ஸ்

எம்.எஸ்சி., டாக்சிகாலஜி அல்லது என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி

போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் இகோ டாக்சிகாலஜி

பி.எச்டி., டாக்சிகாலஜி அல்லது என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி

 

குறுகிய கால படிப்பு: டிப்ளமோ இன் அக்குவாட்டிக் இகோலஜி, எக்ஸ்னோபயோடிக்ஸ்

 

தகுதிகள்: இளநிலை படிப்பிற்கு, பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு, தாவரவியல், வேதியியல், விலங்கியல், உயிர் வேதியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், மருந்தகம், உயிர் வேதியியல், உயிரி தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், சுற்றுச்சூழல் உயிரியல் போன்ற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், நோயியல், உடலியல், நோய் எதிர்ப்பியல், மற்றும் மரபியல் உள்ளிட்ட துறைகளில் பயின்றவர்களும் ‘டாக்சிகாலஜிஸ்ட்’ ஆக முடியும்.

 

முக்கிய நுழைவுத்தேர்வுகள்: அகில இந்திய முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்-பி.ஜி.,/ ஏ.ஐ.பி.எம்.டி.,), ஒருங்கிணைந்த பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு, டெல்லி பல்கலைக்கழக மருத்துவ நுழைவுத்தேர்வு (டி.யு.எம்.இ.டி.,), தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் கல்வி நிறுவன நுழைவுத் தேர்வு, மருந்தக தேசிய கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நுழைவுத் தேர்வு, பஞ்சாப் மருத்துவ நுழைவுத்தேர்வு, ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் – முதுநிலை நுழைவுத்தேர்வு.

 

முக்கிய கல்வி நிறுவனங்கள்

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி அண்ட் டாக்சிகாலஜி, காஞ்சிபுரம்

சென்டரல் டிரக் ரீசர்ச் இன்ஸ்டிடியூட், லக்னோ

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டாக்சிகாலஜி ரீசர்ச், லக்னோ

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாகியூடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச், பஞ்சாப்

ஸ்கூல் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஐஐடி., காராக்பூர்

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு

எஸ்.சி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் பயோசயின்ஸ் அண்ட் பயோடெக்னாலஜி ரீசர்ச் அண்ட் டெவலெப்மெண்ட், கேளரா

எஸ்.சி.எம்.எஸ்.,டெக்னாலஜி அண்ட் மேனஜ்மென்ட், கொச்சி

பவான்ஸ் நியூ சயின்ஸ் கல்லூரி, ஹைதராபாத்

இன்ஸ்டிடியூட் ஆப் ரீபுரோடக்டீவ் மெடிசன், கொல்கத்தா

கஸ்துரிபா மெடிக்கல் கல்லூரி, மணிப்பால்

 

மரபுவழிக் கல்வி ஏன் மாறாமல் தொடர்ந்து செயல்படுகிறது? சிறப்புக் கட்டுரை

கல்வி : போதாமைகளும் தீர்வும்

மரபுவழிக் கல்வியில் பாடம் கற்பிக்கும் முறைகள் நெடுநாட்களாகவே மாறாமலிருக்கின்றன. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வந்தபோது பட்டறைகளில் தொழிலாளர்கள் குவிக்கப்பட்டனர். அப்போது அறிமுகமாகிய புதிய தொழில் நுட்பங்களைக் கையாளும் அளவுக்கு தொழிலாளர்களை கல்வியறிவு பெற்றவர்களாகத் தயாரிக்கும் நோக்கத்தையும் உள்ளடக்கிய பள்ளிகள் அப்போது தொடங்கப்பட்டன. சங்கு ஊதினால் பட்டறைக்கு தொழிலாளர்கள் சென்றதுபோல், மணியடித்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றனர். ஆங்கிலம், வரலாறு, கணிதம் என்று ஏதோ ஒரு பாடப்பொருள்பற்றி ஒருமணி நேரம் அல்லது ஒரு ‘பீரியட்’ வகுப்பெடுக்கும் ஆசிரியர், அதில் பெரும்பகுதியை நேருக்கு நேராக மாணவர்களுக்கு முன்னால் நின்றுகொண்டு விளக்கவுரை நல்கியும், மீத நேரத்தில் கரும்பலகையில் எழுதிக் காண்பித்தும்தான் கற்பித்தார். இன்றுவரை அதே முறை தொடர்கிறது. அந்த ஆரம்ப நாட்களோடு ஒப்பிடும்போது, தற்போதைய அன்றாட வாழ்க்கைமுறையில் பிரமாண்டமான மாற்றங்கள் வந்திருக்கின்றன. அப்போது நடந்தும், மாட்டு, குதிரை வண்டிகளில் பயணித்தவர்கள் இப்போது, பேருந்திலும் மோட்டர் சைக்கிள்களிலும் செல்கிறோம். அப்போது விறகு அடுப்பை பயன்படுத்தியவர்கள், இப்போது ‘கேஸ்’ (வாயு) அடுப்பை பயன்படுத்துகிறோம். அப்போது கிணற்றில் தண்ணீர் சேந்திப் பயன்படுத்தியவர்கள் இப்போது வீட்டுக்குள்ளேயே குழாய்மூலம் தண்ணீர் பெறுகிறோம். அப்போது பொழுதுபோக்குக்காக வெளியூர்களில் நடந்த தெருக்கூத்துக்குச் சென்று இரவு முழுதும் விழித்திருந்து பார்த்தவர்கள் இப்போது வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சி பார்க்கிறோம். அப்போது தூரத்தில் இருப்பவர்களோடு பேச அலைபேசிகள் இல்லை. மின்சார விளக்குகள், குளிர்பதன அறைகள், விமானப் பயணம், இணையம் என்று எவ்வளவோ வியக்கவைக்கும் மாறுதல்கள் தற்காலத்தில் வந்திருக்கின்றன.

 

ஆனால் பள்ளி, கல்லூரிகளில் பாடம் கற்றுக் கொடுக்கும் முறை மாத்திரம் மாறாமலிருக்கிறது. ஆனால் பாடப் பகுதிகள் காலத்துக்கு காலம் மாறியிருக்கின்றன. புதிய தேவைகளுக்கேற்ற வகையில் பாடத் தலைப்புகளும் பாடத் திட்டங்களும் மாறியிருக்கின்றன. செய்தி, தகவல் தொழில்நுட்பம் போன்ற நவீனத் துறைகளும் பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. கற்றுக்கொடுக்கும் முறைகளில்கூட அவ்வப்போது சில மாற்றங்களை முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவற்றால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் நிகழவில்லை. எடுத்துக்காட்டுகளாக ரேடியோவழிக் கல்வி, ஓவர்ஹெட் புரொஜக்டர்கள், பவர்பாயிண்ட் ஸ்லைடுகள், டேப்ரிக்கார்டர்களைப் பயன்படுத்துதல், தொலைதூரக் கல்விமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவையனைத்தும் நேருக்கே நேர் வழங்கப்படும் மரபுவழிக் கல்வியை பதிலீடு செய்ய இயலவில்லை. எனவே, மரபுவழிக் கல்வி இன்னும் பழைய வழிகளிலேயே தொடர்கிறது.

 

 

 

மரபுவழிக் கல்வி முறை மாறாமலிருப்பதற்கு முக்கியக் காரணம்:

 

மரபுவழிக் கல்வி முறை மாறாமலிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணமிருக்கிறது. கல்வி வழங்குவது என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மாத்திரமல்ல. ஆசிரியரும் மாணவரும் முகத்துக்கு முகம் பார்த்துப் பரிமாறிக்கொள்ளும் பல பரிமாணங்களை அது உள்ளடக்கியிருக்கிறது. அனைத்துக் குழந்தைகளுக்குமே அன்னைதான் முதல் ஆசிரியை. குழந்தையை தவழவைக்க, நடக்கவைக்க, பேசவைக்க, விளையாடவைக்க – அனைத்துச் செயல்களையும் கற்றுக்கொள்ள குழந்தை அம்மாவைத்தான் சார்ந்திருக்கிறது. இல்லத்தைத் தாண்டி வெளியுலகத்தில் ஆரம்ப நிலை ஆசிரியரிடம்தான் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. ‘நீ வாடீ’ என்று அழைக்கும் அக்காவிடம் ‘நீ போடீ’ என்று பதில் சொல்லும் குழந்தையின் மழலையை ரசிக்கும் பெற்றோரிடமே, அதே குழந்தை பள்ளியில் சேர்ந்து வீடு திரும்பியபிறகு ‘எங்க மிஸ் வாடீ, போடீ என்றெல்லாம் இனிமேல் பேசக்கூடாது’ என்று சொல்லிவிட்டார்கள் என்று விழிகள் விரியச் சொல்லும்போது, குழந்தையின்மீது ஆசிரியை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நன்கு உணர்கிறோம். ‘மிஸ்’ சொல்வது குழந்தைக்கு வேதவாக்குக்கு நிகரானதாகத் தோன்றுகிறது. நேருக்கு நேர் கல்விப் பரிமாற்றம்தான், கற்பித்தல் வழிகளிலேயே சிறந்த வழி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. பள்ளிக் கல்வி ஆசிரியர்களின் பணி, மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பதோடு மாத்திரம் நிறைவடைந்து விடுவதில்லை. அவர்கள்தான் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கிறார்கள். மாணவர்களை நாட்டின் நல்ல குடிமகன்களாக மாற்ற அவர்களால்தான் முடிகிறது. மாணவர்களின் கட்டுக்கடங்காத தன்மையை உணர்ந்து, அனுசரித்து, அவர்களின் சுதந்திரங்களின் வரம்புகளைப் புரியவைப்பவர்களும் ஆசிரியர்கள்தான். சமுதாயத்தில் கூட்டு வாழ்வு வாழ, மாணவர்களின் பள்ளி வாழ்க்கைதான் பரிசோதனைக்கூடமாக இருக்கிறது. கல்வியாளர் பெர்னார்ட் கான்ஃபூ – செய்திக்கும் (Information) அறிவுக்கும் (Knowledge) இருக்கும் வேறுபாட்டை விளக்கியிருக்கிறார். சொற்கள், ஒலி, ஒளி மூலம் அனுப்பும் தகவல்கள், தரவுகள், வடிவங்கள், படங்கள், குறிப்புகள், அபிப்பிராயங்கள், மதிப்பீடுகள் ஆகியவை செய்திகளாகின்றன. செய்திகளைச் சுழலவிடலாம். சேமிக்கலாம். ஒவ்வொரு நபரும் அந்தச் செய்திகளை தங்கள் வரலாறு, சூழ்நிலை, சந்தர்ப்பத்துக்கேற்ப மீட்டுருவாக்கி வெளிப்படுத்துவதுதான் அறிவு. செய்திகள் ஒரே அளவிருந்தாலும், அதிலிருந்து பெறப்படுகிற அறிவு நபருக்கு நபர் வேறுபடுகிறது. செய்தி பரிமாறப்படுவது. ஆனால் அறிவு ஈட்டப்படுவது; தேடிப் பெறுவது; பொருத்திக் கட்டமைக்கப்படுவது. நேருக்கு நேர் கற்பித்தல் முறையில் செய்திகளை, அறிவாக இயல்பு மாற்ற மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. செய்திகளை, அறிவாக இயல்பு மாற்றம் செய்யும் பயிற்சி பெற மாணவர்கள் அசையா உறுதியோடு உள்ளத் தூண்டுதல்களும் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் அந்தத் திறமையைப் பெற ஆசிரியர்கள் ஊக்கியாக (Catalyst), தூண்டுவிசையாகச் செயல்படுகிறார்கள். களிமண்ணாக இருந்த தன்னை சிற்பமாக வடிவமைத்த ஆசிரியர்களை மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் மறப்பதில்லை. நேருக்கு நேர் கற்பித்தலில் இத்தகைய பெருநன்மைகள் இருப்பதால்தான், இத்துணை காலம் கற்பித்தல் முறைகளில் பெரிய மாற்றங்கள் புகுத்தப்படாமல் மரபுவழியே தொடர்கிறது என்று தோன்றுகிறது.

 

 

 

கற்பிக்கும் முறை மாற்றப்படாவிட்டாலும், கல்விப்புலம் பெற்றிருக்கும் மாறுதல்கள்:

 

சுதந்திரத்துக்குப் பின்பு நம் கல்விப்புலம் பெரும் மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. 1950இல் 36 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை, 2015இல் 125 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது உலகிலேயே மிக அதிகமான படிப்பறிவில்லாதவர்களைக் (Illiterates) கொண்டிருக்கிற நாடு என்ற சிறுமையை நாம் தாங்கவேண்டியிருக்கிறது. சுதந்திரம் பெற்றபோது நம் நாட்டில் படிப்பறிவு பெற்றவர்கள் 12.2 விழுக்காடுதான். 2011 சென்சஸ் கணக்குப்படி, அது 74.4 விழுக்காடளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேசமயம், சீனாவில் அது 95.1 விழுக்காடளவுக்கு உயர்ந்திருக்கிறது. சுதந்திரத்தின்போது ஆரம்பநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 135000லிருந்து 2011iல் அது 780000ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் தொகை வளர்ந்திருக்கிற அளவுக்கேற்றவகையில் நம் அரசுகளால் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றத்தக்க ஆசிரியர்களைப் பயிற்றுவித்து உள்ளிடவும் இயலவில்லை. அதனால் தனியார்துறையின் உதவி தேவைப்பட்டு, அதுவும் பெறப்பட்டது. அப்படியும் சமுதாயத்தின் கல்விக்கான முழுத் தேவையளவுக்கு, அளிப்பைக் கூட்ட இயலவில்லை. இந்த மாறுதல்களோடு ஏராளமான ஊழல்களும் உள்நுழைந்துவிட்டன. கல்விப்புலத்தில் பால் சார்ந்தும், பொருளியல் சார்ந்தும், சாதிகள் சார்ந்தும் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. அதனால் கல்விப் பங்கீடு நியாயமானதாக இல்லை. கல்வியின் தரம் தாழ்ந்துவிட்டது. சலிப்போடு பாடம் நடத்தும் ஆசிரியர்களும், அக்கறையில்லாமல் பாடம் கேட்கும் மாணவர்களும் சந்திக்கும் இடமாக பள்ளிகளும் கல்லூரிகளும் மாறி வருகின்றன. நேருக்கு நேர் கற்பித்தல் முறை மட்டும் தற்போதைய இந்தியாவின் கல்வித் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை. ஆனால் அதற்கு மாற்றுவழிகளும் வரவில்லை. அதனால் இருக்கிற கல்விமுறையில் பலவிதமான தவறுகளும், ஒழுங்கீனங்களும் உள்நுழைந்துவிட்டன. பெரும்பாலான மாணவர்களுக்கு இப்போது அரைகுறைக் கல்விதான் கிடைக்கிறது. அவர்களை சுயமாக சிந்திக்கத் தெரியாத, படிக்கத் தெரிந்த தற்குறிகளாக உலவவிட்டிருக்கிறோம். இப்போது நாடு எதிர்நோக்கும் மிகப்பெரிய சிக்கல் ஆண்டுக்கு ஆண்டு அரசுகளுக்கும், குடும்பங்களுக்கும் கல்விச் செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும்நிலையில், மேலும் மேலும் அதிகமான மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவேண்டியிருப்பதுதான்!

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ‘சென்டம்’ மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு

அரசு பொதுத்தேர்வில், ‘சென்டம்’ வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. மார்ச், 2ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 8ல், 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில், தமிழக கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு விடைத்தாள்களை மதிப்பிடும் முறையில், பல மாற்றங்கள் வர உள்ளன.

 

கடந்த ஆண்டில், சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த ஆண்டு, இன்னும் கூடுதல் நிபந்தனைகளை கொண்டு வர, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. மதிப்பீட்டு முறையில், ஆசிரியர்கள் கவனமின்றி செயல்படுவதால், அதிக அளவில், ‘சென்டம்’ வழங்கப்படுகிறது.

 

கல்லுாரிகளில் இவர்கள், பிளஸ் 2 மதிப்பெண்களை விட, குறைந்த அளவே கல்வித் திறன் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதனால், மதிப்பீட்டு முறையில் மிக கவனமாக இருந்தால் மட்டுமே, தகுதியான மாணவர்களுக்கு, ‘சென்டம்’ கிடைக்கும்.

 

எனவே, மொழித்தாள்கள் மற்றும் முக்கிய பாடத்தாள்களில், ‘சென்டம்’ வழங்குவதாக இருந்தால், அவர்களின் விடைத்தாளை, பல கட்ட ஆய்வு செய்த பின், மதிப்பெண்ணை இறுதி செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

 

இதற்கான வழிமுறைகள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டத்திலும், கையேட்டிலும் வழங்கப்பட உள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒரே ஆண்டில் 20 ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

மாணவர்கள் இடைநிற்றல் : கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது

.

 

தற்போது தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் இடையில் பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர். இதை தடுக்க பல முயற்சிகள் நடக்கின்றன. மாணவர்கள் இடைநிற்றல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது குறித்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதியில் செய்யப்பட்ட பணிகள் என்ன, எவ்வளவு செலவானது என்பது குறித்தும் மத்திய அரசுக்கு விவரம் தர வேண்டும்.

 

அப்போதுதான் அடுத்த கல்வி ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கணக்கெடுக்கெடுக்கப்படுகிறது. அதில் மாணவர்கள் பெயர், குடும்ப சூழல், பள்ளிக்கும் மாணவர் இருப்பிடத்துக்கும் உள்ள இடைவெளி, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்கள் அனைத்தும் மாநில திட்ட இயக்குநருக்கு செல்லும். அவர் மத்திய அரசுக்கு அனுப்புவார்.

 

இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது முடிந்துள்ளன. இந்த வார இறுதிக்குள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை மாநில திட்ட இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

இந்த கணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவியர் இடையில் நின்றுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

 

* ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 240 மாணவ, மாணவியர் இருப்பதற்கு பதிலாக 200 மாணவர்கள்தான் உள்ளனர்.

 

* ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 150 குழந்தைகளுக்கு பதிலாக 100 அல்லது 120 குழந்தைகள் உள்ளனர்.

மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது

தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; வதந்திகளை நம்ப வேண்டாம்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 

தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், ‘மீசில்ஸ் ரூபெல்லா’ தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த தடுப்பூசி தொடர்பாக, விஷமிகள் சிலர், ‘வாட்ஸ் ஆப்’ மூலம், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

 

 

 

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்: ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, தமிழக அரசின் மீது வைத்த நம்பிக்கையால், ‘மீசில்ஸ் ரூபெல்லா’ தடுப்பூசி திட்டத்தில், தமிழகம் முதற்கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

ஒன்பது மாதம் முதல், 15 வயது குழந்தைகள் வரை, அனைவருக்கும், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம், பிப்., முதல் வாரம் துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது. வழக்கமாக, 10 முதல் 12 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, முதல் தவணையும், 16 முதல், 24 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், இத்திட்டத்தில் தடுப்பூசி போடப்படும். எந்த குழந்தையும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் வராமல் தடுக்கும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

இது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ”மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது குழந்தை களுக்கு கொடிய நோய்களை வராமல் தடுக்கும்,” என்றார்.

 

 

 

உயிருக்கே ஆபத்தாகும் :

 

l மீசில்ஸ் என்பது தட்டம்மை நோய். இது காய்ச்சல், உடல் வலியை ஏற்படுத்தி, உடல் முழுவதும் தடிமனை உருவாக்கும். நோய் வீரியமானால், நிமோனியா ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும்

 

l ரூபெல்லா என்பது கர்ப்பிணிகளை தாக்கினால், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்பில் ஊனம் ஏற்படும்; கருக்கலைப்புக்கு காரணமாகும். உலக சுகாதார நிறுவன ஆய்வுப்படி, உலகில் ஆண்டு தோறும், ஒரு லட்சம் குழந்தைகள், ரூபெல்லா பாதிப்புடன் பிறக்கின்றன. இதைத் தடுக்க, தடுப்பூசியே ஒரே வழி.

தலைவர் இல்லாத கல்வி கட்டண கமிட்டி மாணவர் சேர்க்கையில் பள்ளிகளுக்கு சிக்கல் !!

தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால், கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


 தமிழகம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகள், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க, தமிழக அரசும், நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகள் 
விதித்துள்ளன.எந்த பள்ளியும், கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், கல்வி கட்டணத்தில் பல அம்சங்களை சேர்த்து, பள்ளிகள் தரப்பில் மறைமுக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதை தடுக்க, நீதிமன்ற உத்தரவுப்படி, கல்வி கட்டண கமிட்டியை, அரசு அமைத்தது.

இந்த கமிட்டி, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் செயல்பட்டு வந்தது. இறுதியில், கமிட்டியின் தலைவராக இருந்த, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம், 2015 டிச., 31ல் முடிந்தது. அதன்பின், புதிய தலைவரை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ‘கல்வி கட்டண கமிட்டிக்கு, ஆறு வாரங்களில், தலைவரை நியமிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நான்கு மாதங்களாகியும், இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையில், புதிய கல்வி ஆண்டுக்காக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. ஆனால், கல்வி கட்டண கமிட்டி சார்பில், 2017 – 18ல், புதிய கல்வி ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படாததால், மாணவர்களிடம் பள்ளிகளால் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. எனவே, விரைவில் தலைவரை நியமித்து, குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகிகளும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத்துவம்

‘இந்திய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., – ஐ.ஐ.ஐ.டி., உட்பட, உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஐ.ஐ.டி.,க்கு மட்டும், இரண்டு கட்ட நுழைவு தேர்விலும், மற்ற நிறுவனங்களுக்கு, முதற்கட்ட நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வு, ஏப்ரலில் நடக்கிறது. இதில், தேர்ச்சி பெறுவோர், சென்னை, ஐ.ஐ.டி.,யால் நடத்தப்படும், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவு தேர்வு எழுத தகுதி பெறுவர். அதிலும், தேர்ச்சி பெறுவோர், தரவரிசை பட்டியல்படி, ஆன்லைன் கவுன்சிலிங் மூலம், ஐ.ஐ.டி.,க்களில், இன்ஜினியரிங் சேரலாம்.
இதுவரை, ஜே.இ.இ., தேர்வு எழுதும், பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, ஜே.இ.இ., மதிப்பெண், 60 சதவீதமும், பிளஸ் 2 மதிப்பெண்ணில்,
40 சதவீதமும் சேர்த்து, தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படும்.இந்த ஆண்டு முதல், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அந்த மாணவர்கள், தங்களது பிளஸ் 2 அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்திற்கு, மத்திய மனிதவள அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வில், அனைத்து மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறுவது அவசியமாகி உள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்

NEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.

 

 

டில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.

 

பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் நீட் தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். யூஜிசி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

அனைத்து 1-12 வகுப்பு மாணவர்களையும் EMIS ல் உள்ளீடு செய்யலாம் !!!

தொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைச் சார்பான விவரங்கள் உள்ளீடு செய்தது சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

 *EMIS தளம் open ஆகியுள்ளது .
6 முதல் 12 வரை EMIS புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.1-5 வகுப்புகளுக்கு update செய்யலாம்.ஆதார் எண் இணைக்கலாம்